Monday 26 February 2018

உங்களிடம் உள்ளது ஆசையா? பேராசையா?

உங்களிடம் உள்ளது ஆசையா? பேராசையா?
ஆசை! பேராசை!

ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்

ஆசை என்பது ஒரு துவக்கத்தின் முடிவு. பேராசை என்பது ஒரு முடிவின் துவக்கம்.

இதை அறிந்துதான் சத்குரு அத்தனைக்கும் ஆசைபடு என்றார். பேராசைபடு என்று சொல்லவில்லை.

திரு.அப்துல் கலாம் அவர்கள் இதை மையமாக வைத்துதான் கனவு காணுங்கள் என்றார்.

இதை விவேகானந்தர் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்கிறார்.

ஆசைபடாமல் இருந்தால் மனிதன் ஆகாய விமானம் கண்டுபிடித்திருக்கமாட்டான். அந்த ஆசை அதிகமாகி பேராசையாக உருமாறிய பின்புதான் அனைத்தையும் அழிக்கும் ஆயுதத்தை கண்டுபிடித்தான்.

ஆசை அழிவை தருவதில்லை பேராசைதான் அழிவை தருகிறது. உனக்கு என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும். உனக்கு என்ன வந்து சேருமோ அதுதான் வந்து சேரும். அதை பெற நினைத்தால் அது ஒரு நல்ல துவக்கத்தின் முடிவு. அடுத்தவர்க்கு போய் சேருவதை தனக்கானது என்று அதை தன்வசப்படுத்த நினைத்தால் அது பேராசை அது ஒரு முடிவின் துவக்கம்.

ஒரு துவக்கத்தின் முடிவை அல்லது ஒரு முடிவின் துவக்கத்தை எடுப்பது அவரவர் வாழ்க்கையில் உள்ளது. பணிவு..!
  அசோக மன்னர் ஒரு நாள் தன் நாட்டை சுற்றிக் கொண்டு ரதத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவி, மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓரமாக ஒதுங்கி நின்றார்.

அதைப் பார்த்த அசோக சக்கரவர்த்தி உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கி சென்று அந்த வயோதிக துறவியின் காலில் நெடுஞ்சண் கிடையாக விழுந்தார். துறவியும் தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் ஒரு நாட்டின் மன்னர் ஒன்றும் இல்லாத துறவி காலில் விழுவதா? என்று சங்கடப்பட்டார். அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அதைக் கேட்ட அசோக மன்னர் சிரித்துவிட்டு, அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.

ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே! என்று கட்டளையிட்டார். அரச கட்டளையை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் அனுப்பி வைத்தார். ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிக சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலையும் ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.

மனிதத் தலைக்கு, சுடுகாட்டிற்கு சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர். மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள் என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்கு சென்றார்.

ஆட்டுத் தலை அதிக சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை கடைசியில் ஒரு வேட்டைக்காரன் எடுத்துக் கொண்டான். ஆனால் மனிதத் தலையைப் பார்த்தவர்கள் அருவருப்புடன் பின் வாங்கினர். ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.

அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்! என்றார் அசோகர். ஆனால் இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை.

இப்போது அசோக மன்னர், தன் அமைச்சரிடம் பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் துறவிகள். அத்தகைய துறவிகளின் காலில் விழுந்து வணங்குவதில் தவறில்லை என்றார்.

நீதி:
பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை.

No comments:

Post a Comment